தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுச்சாமி, மாடசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி, என்ஜினீயர்கள் கிருஷ்ண குமார், சுப்பிரமணியன், புண்ணியமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேரை தமிழக அரசு நியமித்தது.

இந்த நியமன நடவடிக்கை சட்டவிதிகளின் படியும், சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள நெறிமுறைகளின் படியும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.

இந்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மேலும், 11 பேர் நியமனத்தில் சரியான வழிமுறைகள் கையாளப்படவில்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட், பணிக்காலத்தை நிறைவு செய்யாத நீதிபதி எப்படி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்? என்றும் கேள்வி எழுப்பியது.


அத்துடன், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் தேர்வில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய அனுமதி அளித்தது. ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களில் ராம மூர்த்தி தவிர மற்ற 10 பேரையும் மீண்டும் உறுப்பினராக தேர்வு செய்யலாம். அவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ராமமூர்த்தியை மட்டும் மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Post a Comment

 
Top