சிறுவயதிலேயே
பேப்பர் பொறுக்கி பிழைப்பு நடத்தி வரும் அப்புக்குட்டி எதிலும் நேர்மையாக
இருக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறார். இவரது நேர்மையே அவரை
வாழ்க்கையில் பெரிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இவர் நாலு பேரை வேலையில்
அமர்த்தும் அளவுக்கு பெரிய ஆளாக மாறிய பிறகு, தனது அம்மாவுக்காக வீடு வாங்க வேண்டும் என்று
எண்ணுகிறார்.
இந்நிலையில்,
நாயகி தில்லிஜாவின் அப்பா
தொழில் ரீதியாக நஷ்டமடைந்து, மோசடி செய்ததாக
கூறி ஜெயிலுக்கு போகிறார். அவரை வெளியே ஜாமினில் கொண்டு வருவதற்கு ரூ.20 லட்சம் வரை தேவைப்படுகிறது. இதற்காக தாங்கள்
வாழ்ந்து வந்த வீட்டை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.
அந்த வீடு
அப்புக்குட்டிக்கு அவரது நண்பர் மூலமாக தெரியவர, அதை வாங்குவதற்காக ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுக்கிறார். அதை வாங்கிக்
கொண்ட நாயகி தனது அப்பாவை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். ஆனால், அந்த வீட்டை பத்திரப்பதிவு செய்வதற்கு
முன்பாகவே அப்புக்குட்டியை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.
ஜெயிலில் இருந்து
ஜாமினில் வெளியே வரும் அப்புகுட்டியின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரையே தனது
வாழ்க்கை துணையாக்கி தொழிலிலும் முன்னேற்றம் காண வைக்கிறார் நாயகி தில்லிஜா. இந்த
சூழ்நிலையில், திரைப்பட
இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர், தான் எடுக்க
இருக்கும் திரைப்படத்துக்கு பைனான்ஸ் கேட்டு அப்புக்குட்டியை அணுகுகிறார்.
அப்புக்குட்டியோ,
ஹீரோயின் ஆக வேண்டும்
என்பது என் மனைவியின் சிறுவயது ஆசை. அவளை ஹீரோயினாக போட்டால், இந்த படத்தை நானே பணம் போட்டு தயாரிக்கிறேன்
என்று கூறுகிறார். இதனால் கணவன், மனைவியை வைத்தே
படத்தை இயக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் இயக்குநர் எம்.எஸ்.பாஸ்கர்.
கடைசியாக அந்த
படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார்களா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
நாயகன்
அப்புக்குட்டி படிப்பறிவு இல்லாத முதலாளி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக
பொருந்தியிருக்கிறார். படம் முழுக்க எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார். முதல்
பாதியில் ஒரு கெட்டப்பிலும், பிற்பாதியில் ஒரு
கெட்டப்பிலும் வந்து அசத்துகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவர் தேம்பி அழுவது
நெஞ்சை நெகிழ வைக்கிறது.
தமிழுக்கு அறிமுக
நாயகியான தில்லிஜா, தனது நடிப்பால்
ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எதார்த்தமான கதை என்பதால் இவருடைய நடிப்பும்
எதார்த்தம் குறையாமல் இருக்கிறது. பார்க்கவும் அழகாக இருக்கிறார். அட்வகேட்டாக
வரும் பவர் ஸடார் சீனிவாசன் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
இயக்குனராக வரும்
எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் இயக்குனராகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் இவர் அப்புக்குட்டிக்கு
நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். மற்ற
கதாபாத்திரங்களும் தங்களுக்குண்டான நடிப்பில் மிளிர்கிறார்கள்.
பிரபலமான
நடிகர்கள் இல்லாவிட்டாலும் எதார்த்தமான கதையை மட்டுமே நம்பி இப்படத்தை
எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவராமன். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு
கதாபாத்திரங்களையும் அழகாக வேலை வாங்கியிருக்கிறார். படம் எதார்த்தமான பதிவாக
அமைந்திருப்பது மிகச்சிறப்பு. உழைப்பால் உயர்ந்துவரும் அப்புக்குட்டி சொந்தமாக
வீடு வாங்கும் முயற்சியில் இறங்கும்போது அவருக்கு வரும் பிரச்சினை எதிர்பார்ப்பை
ஏற்படுத்துகிறது. இருப்பினும், படத்தில் பல
காட்சிகள் செயற்கையாக அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

Post a Comment