1950-களில்
இருந்து 70-கள் வரை திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை
சாவித்ரி. நடிகையர் திலகம் என போற்றப்பட்ட இவரது திரையுலக வாழ்க்கை மிகவும்
சுவாரஸ்யமானது. அன்றைய உச்ச நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டிபோடும்
அளவுக்கு இவரது நடிப்பு அபாரமானது.
அப்பேர்பட்ட
நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க சமீபத்தில் நாக் அஸ்வின் என்பவர்
திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கான
திரைக்கதை எழுத ஆரம்பித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திரைக்கதை எழுதும் பணியினை முடித்தத நாக்
அஸ்வின், அப்படத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம்
என்று பரிசீலனையில் ஈடுபட்டு வந்தார்.
பாலிவுட் நடிகை
வித்யாபாலன் மற்றும் நயன்தாரா, நித்யாமேனன்
உள்ளிட்ட நடிகைகள் அவரது பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர்களையெல்லாம் விட்டுவிட்டு சமந்தா
மற்றும் கீர்த்தி சுரேஷை இப்படத்தின் கதாநாயகிகளாக நாக் அஸ்வின் ஒப்பந்தம்
செய்துள்ளார். இதை மகளிர் தினமான இன்று சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில்
உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டு பேரில்
கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தாவுக்கும்
முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு ‘மகாநதி’ என்று தலைப்பு
வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ்
நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
நாக் அஸ்வின்
இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்திற்கு
இசையமைப்பாளர் யார்? என்பது இன்னும்
முடிவாகவில்லை. அனேகமாக இளையராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆவார்
என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment