கிராமத்தில்
வாழும் இளவரசுவின் மகனான நாயகன் அருண் சிதம்பரம் சிறு வயதில் இருந்தே எதையாவது
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய நண்பர் யோக்ஜேப்பி தனது தங்கை
நாயகி ஜியா சங்கருடன் வசித்து வருகிறார். அருண் சிதம்பரம், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அறிவியல் மீது நாட்டம் கொண்டவர். படிப்பு
தவிர எந்த ஒரு விஷயத்திலும் கேள்வி கேட்டு அதற்கு விடை காண வேண்டும். எதையாவது
புதிதாக கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
இதனால் 8-வது
வகுப்பிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ரேடியோ
மெக்கானிக்கிடம் சேர்ந்து அதில் ஆர்வம் காட்டுகிறார். புதிய கண்டுபிடிப்பில்
தீவிரமாக இருக்கிறார். இந்த கால கட்டத்தில் ஊரில் கடும் மின்வெட்டு வருகிறது.
தினமும் 18 மணி நேரம் மின்சாரம் இல்லை. இதற்கு மாற்று வழி என்ன என்பதை அருண்
சிதம்பரம் யோசிக்கிறார். கல்வி அறிவை வளர்க்க பேராசிரியர் ஞானசம்பந்தம் நடத்தும்
நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கிறார். மின் தட்டுப்பாட்டை போக்கும் புதிய
முயற்சியில் இறங்குகிறார்.
இதற்கிடையில்
என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை ஐ.டி. கம்பெனியில் அதிகம் சம்பளத்துக்கு வேலை
பார்க்கும் யோக்ஜேப்பி, வேலை அழுத்தம்
காரணமாக அதை விட்டு விட்டு கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்கிறார். படிக்காமல்
ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று அலையும் அருண் சிதம்பரத்தையும், ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு
கிராமத்தில் விவசாயம் பார்க்கும் யோக் ஜேப்பியையும் அந்த ஊர் மக்கள் ஏளனமாக
பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி
விடாமுயற்சியில் ஈடுபடும் இருவரும் கடைசியில் சாதித்தது என்ன என்பது மீதிக்கதை.
நாயகன் அருண்
சிதம்பரத்துக்கு இது முதல் படம். என்றாலும், கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை பதிவு செய்து
பாராட்டு பெறுகிறார். கிராமத்தில் சாதிக்க துடிக்கும் சாதாரண இளைஞனாக வாழ்ந்து
காடடி இருக்கிறார். யோக்ஜேப்பி ஐ.டி. வேலையைவிட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும்
இளைஞனாக மாறி அசத்துகிறார். இன்றைய படித்த இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டும்
வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
நாயகி ஜியா
சங்கர் பொருத்தமான தேர்வு. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து வாழும் பெண்ணாக
முத்திரை பதிக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கைதனம் இல்லாமல் இவரது நடிப்பு
யதார்த்தமாக அமைந்திருப்பது அருமை. முதல் படத்திலேயே மனதில் பதிகிறார்.
மகன் சாதனை புரிய
வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் தந்தையாக வரும், இளவரசு மிகைபடுத்தாத கிராமத்து அப்பாவாகவே
கண்களுக்கு தெரிகிறார். மகன் மீது அக்கறை கொண்ட பாசம் நெகிழ வைக்கிறது. பிளாக்
பாண்டி படம் முழுவதும் வந்து நகைச்சுவையில் தனித்துவமாக இடம் பிடிக்கிறார். இது
இவருக்கு பெயர் சொல்லும் படமாகும் என்பது மட்டும் உண்மை.
கதை, வசனம், பாடல், நடிப்பு, இயக்கம் என அருண் சிதம்பரம், நடிப்பை போலவே மற்ற விஷயங்களிலும் தனது திறமையை
அருமையாக கையாண்டு இருக்கிறார். அமெரிக்காவில் அதிக சம்பளத்துக்கு பார்த்த வேலையை
விட்டுவிட்டு சினிமாதுறைக்கு வந்தது சரிதான் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார்.
அவரது தந்தைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
கிராமத்து
இளைஞர்களும் முயற்சி இருந்தால் நிச்சயம் சாதனை புரியலாம் என்பதை ஏற்கும் விதமாக
சொல்லி இருக்கிறார். ஐ.டியில் வேலை பார்த்தாலும் விவசாயத்தில் சாதிக்க முடியும்.
அதிகம் படிக்காவிட்டாலும் அறிவியலில் சாதிக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு
செய்து இருக்கிறார்.
40 சதவீத மக்களுக்கு
80 சதவீத விவசாயம் கைகொடுத்த
காலம் மாறி, 80 சதவீத மக்களுக்கு
40 சதவீதமாக விவசாயம்
குறைந்துவிட்டது. எனவே படித்தவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் தான் நாட்டை
காப்பாற்ற முடியும். குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம்
என்ற முக்கியமாக கருத்துக்களை எடுத்துக்கூறி இளைஞர்களிடம் புதிய ஆர்வத்தை
தூண்டியுள்ள இவரது முயற்சியை கைதட்டி பாராட்டலாம்.
சர்வதேச அளவில் 2 ரெமி விருது உள்பட 7 சர்வதேச விருகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ள
‘கனவு வாரியம்‘ நமது ரசிகர்களிடமும் நனவு வாரியமாகும் வகையில்
ரசிக்கும் சிராமத்து கதையுடன் நல்ல கருத்துக்களையும் கொண்டு சேர்த்துள்ள அருண்
சிதம்பரம், ‘ஆகா ஓகோ’ சிதம்பரமாகி இருக்கிறார்.
ஷியாம் பெஞ்சமின்
ரசிக்கும் இசையை கொடுத்து இருக்கிறார். ரெமி விருது பெற்ற குழந்தைகள் பாடலுக்கு
அருண் சிதம்பரத்தின் வரிகள் மெருகேற்றுகின்றன. பின்னணி இசை படத்துக்கு பலம்.
எஸ்.செல்வகுமார் தனது கேமராவால் கிராமத்து அழகை கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க
வைத்திருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத இதுபோன்ற தமிழ் படங்கள் நிச்சயம்
இளைஞர்களுக்கு புதிய சாதனைக்கு வழிவகுக்கும். ‘கனவு வாரியம்’ அப்துல்கலாம் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரையை
நனவாக்கச் சொல்லும் அற்புதமான படைப்பு.

Post a Comment