இந்தியாவின்
விமானந்தாங்கிப் போர்க்கப்பலான INS விக்ராந்தின்
செயல்திறனை நினைத்து பயப்படும் பாகிஸ்தான் கடற்படை, ராணுவத்தையோ, விமானங்களையே அனுப்பி அதை அழிக்கமுடியாத
நிலையில், அமெரிக்காவில்
இருந்து வாங்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ‘காஸி’யை வைத்து INS விக்ராந்த்தை
அழிக்க, அது
நிறுத்தப்பட்டிருக்கும் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இது இந்திய
உளவுத்துறை அறிந்து, இந்திய
கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உயர் அதிகாரிகளாக இருக்கும் ஓம் பூரி
மற்றும் நாசருக்கு எச்சரிக்கிறது. அவர்கள் கிழக்கு கடற்கரையோர பாதுகாப்பை
உறுதிப்படுத்த கோபக்கார கேப்டன் கே.கே.மேனன் மற்றும் சாதுர்யமான கேப்டன் ராணா
ஆகியோர் பணிபுரியும் எஸ்21 நீர்மூழ்கி
கப்பலை, காஸியை எதிர்க்க
அனுப்புகிறார்கள்.
காஸியை
ஒப்பிடும்போதும் பலம் குறைந்த எஸ்-21 எப்படி பாகிஸ்தானின் சதியை முறியடித்து, அதற்கு கடலுக்குள்ளேயே எப்படி சமாதி
கட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி விறுவிறுப்பான கதை.
படத்தின் நாயகன்
ராணா டகுபதி, கப்பற்படை
அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவர் அறிமுக காட்சியில்
நடந்துவரும் கம்பீரமே இதற்கு சாட்சி. அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் நமக்கு வெறி
ஏற்றியிருக்கிறார். மற்றொரு கேப்டனாக வரும் கே.கே.மேனன் படத்தின் இன்னொரு ஹீரோ
என்று சொல்லலாம். எதிரியை பார்த்தாலே அழித்துவிட வேண்டும் என்கிற இவரது ஆக்ரோஷமான
நடிப்பு படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
மற்றபடி, கப்பலின் மற்றொரு கேப்டனாக வரும் அதுல்
குல்கர்னியும் இவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை
கொடுத்திருக்கிறார். அகதியாக வரும் டாப்சியை பார்க்கும்போதே நமக்கும் சோகம்
தொற்றிக் கொள்கிறது. மற்றபடி, எஸ் 21-ல் பணிபுரியும் வீரர்கள், ஓம் பூரி, நாசர் என அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து
நாம் ஒரு ஆழ்கடல் பயணம் செய்ததுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர்
சங்கல்ப், தான் புதுமுகம்
என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு
இணையாக படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார். நாம் படம்
பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒவ்வொரு சம்பவங்களையும் மிகவும் திரில்லாக
நகர்த்தியிருக்கிறார். நாம் செய்திதாள்களில் படித்த சம்பவங்களை நேரில் பார்க்கும்
அனுபவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒருசில காட்சிகள் நம்மை உணர்ச்சி
பரவசத்தில் ஆழ்த்துகிறது என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக,
காஸியின் தாக்குதலில்
இந்தியாவின் எஸ்-21 நீர்மூழ்கி
கப்பல் லேசாக விபத்துக்குள்ளாகி தரை தட்டிவிடும். அப்போது, ஒரு குறிபிட்ட தொலைவு வரையே எஸ்-21-ஆல் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், காஸியோ அந்த எல்லையை தாண்டி நிற்கும்.
இருப்பினும், இவர்கள் சூழ்ச்சி
வலை செய்து காஸியை தாக்கமுடியும் என்ற எல்லைக்கு கொண்டு வர வைக்கும் காட்சிகளில்
எல்லாம் கண்ணிமைக்க முடியாமல் வைக்கிறது.
மதியின் ஒளிப்பதிவு
நாம் நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்கும் உணர்வை கொடுத்திருக்கிறது. கிராபிக்ஸ்
காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக கையாளப்பட்டிருக்கிறது. கே-யின் பின்னணி இசை
ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இருக்கிறது. இடத்திற்கு தகுந்தாற்போல்
தேவையான இசையை மட்டுமே கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில் ‘காஸி’ போர் வீரர்களுக்கு பெருமை சேர்த்தது.

Post a Comment