அரியானாவில் உள்ள
ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த அமீர்கானுக்கு மல்யுத்தத்தில் அதிக
ஈடுபாடு உண்டு. மல்யுத்தத்தில் சாதித்து நாட்டுக்கு பல பதக்கங்களை பெற்றுக்
கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தேசிய அளவில் மல்யுத்தத்தில் சாதிக்கும்
அமீர்கான் தன்னுடைய குடும்ப சூழ்நிலையால் அடுத்த நிலையை எட்ட முடியாமல் போகிறது.
எனவே, திருமணத்திற்கு பிறகு தனக்கு பிறக்கப் போகும்
மகனையாவது மல்யுத்தத்தில் சாதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால்,
அவருக்கோ அடுத்தடுத்து
பிறக்கும் நான்கு குழந்தைகளும் பெண் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெண் குழந்தைகளால்
மல்யுத்தத்தில் சாதிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு தனது ஆசை நிறைவேறாத
வருத்தத்தில் இருக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில்,
ஒருநாள் அவரது
குழந்தைகளில் மூத்த பெண்கள் இருவரும் ஒரு சிறிய தகராறில் இரண்டு பசங்களை புரட்டி
எடுக்க, அதை பார்க்கும்
அமீர்கான், பெண்
குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்று அந்த குழந்தைகள் இருவரையும் மல்யுத்த
பயிற்சியில் களமிறக்குகிறார்.
சிறு வயது முதலே
இருவருக்கும் பயிற்சி கொடுக்கும் அமீர்கான், கடைசியில் தன்னால் சாதிக்க முடியாததை தனது பெண்
பிள்ளைகளை வைத்து சாதித்தாரா? என்பதே
மீதிக்கதை.
இப்படம் மல்யுத்த
வீரர் மகாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அமீர்கான் அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
மூன்றும் பெண் குழந்தையாய் பிறந்தும், நான்காவதாக ஆண் குழந்தை பிறக்காதா? என்று ஏங்கும் இடங்களில் நம்மையும் ஏங்க வைத்துவிடுகிறார்.
அதேபோல், மல்யுத்த பயிற்சிக்காக தன்னுடைய விளைநிலத்தை
சீர்படுத்தும் இடங்களில் பரிவு ஏற்பட வைத்திருக்கிறார். அப்பாவாகவும், பயிற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார். மேலும்,
இந்த வயதிலும் தன்னை
வருத்திக் கொண்டு உடல் எடையை கூட்டி, குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அமீரின் மனைவியாக
வரும் சாக்க்ஷி தன்வர், நான்கு
பெண்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும்
ஓகே சொல்ல வைக்கிறார். அமீர்கானின் குழந்தைகளாக வரும் நான்கு பெண்களும் தங்கள்
கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில்
அமீர்கானுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அனைத்து கதாபாத்திரங்களும் சம பலம் கொடுத்து
இயக்கியிருக்கிறார் இயக்குனர் நிதேஷ் திவாரி. ஒரு சாதாரண கதையம்சமுள்ள படத்தில்
செண்டிமென்ட், எதார்த்தமான
காமெடி மற்றும் தந்தை-மகள் பாசப்பிணைப்பு என அனைத்தையும் சுவாரஸ்யமாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ப்ரீதம்
சக்கரபோர்த்தியின் இசையில் பாடல்கள் சில ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், காட்சிகளுக்கேற்றவாறு பின்னணி இசையிலும்
கலக்கியிருக்கிறார். சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு மல்யுத்த காட்சிகளை எல்லாம்
சிறப்பாக படமாக்கியிருக்கிறது. அதேநேரத்தில் கிராமத்தின் பசுமையையும், வறுமையையும் தெளிவாக கண்முன்னே
கொண்டுவந்துள்ளது.

Post a Comment