கதாநாயகன்
வால்டர் பிலிப்ஸ் இந்து சமயத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே ‘பம்பாய்’ படத்தை பார்த்து, அதில் வரும் இந்துவான அரவிந்த்சாமி முஸ்லிம்
பெண்ணான மனிஷா கொய்ராலாவை திருமணம் செய்துகொள்வது போல் தானும் ஒரு முஸ்லிம் பெண்ணை
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.
வாலிபனான பிறகு,
ஒரு முஸ்லிம் வீட்டு
திருமணத்தில் கதாநாயகியான இஷா தல்வாரை சந்திக்கிறார். தான்நினைத்ததுபோல் அவர்
இருப்பதைப் பார்த்த வால்டர் பிலிப்ஸ், பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளிடம் பழகுவதற்கான முயற்சிகளில்
இறங்கி, இறுதியில்,
அவளிடம் பழகி, தனது காதலை வெளிப்படுத்துகிறார் வால்டர்.
ஆனால், இஷா தல்வாரோ.., ஆச்சாரமான முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர்.
இதனால், பிலிப்ஸின் காதலை
ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ
செய்யாமல் அமைதி காக்கிறார். பிலிப்சும் அவளுடைய பதிலுக்காக காத்திருக்கிறார்.
சிலநாட்கள்
கழிந்தும் இஷா தல்வாரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையே என்று, அவளை பார்க்க அவளது வீட்டு சுவர் ஏறி குதித்து
உள்ளே போகிறார் பிலிப்ஸ். ஆனால், இஷா தல்வாரின்
அப்பா நாசரும், சித்தப்பா
தலைவாசல் விஜய்யும் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர்.
ஜெயிலுக்கு
செல்லும் வால்டர் பிலிப்ஸ், தன்னுடைய காதலின்
நிலை என்னவென்று தெரியாத நிலையில் இருக்கிறார். இறுதியில், அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து, தனது காதலில் வெற்றி கண்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
கதாநாயகன்
வால்டர் பிலிப்ஸ் தனது முதல் படத்திலேயே சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார். காதல், ரொமான்ஸ் என
காதல் நாயகனுக்குண்டான நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். நடனத்திலும்
சிறப்பாக செய்திருக்கிறார்.
இஷா தல்வார் ஒரு
முஸ்லிம் பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சில
காட்சிகளில் இவருக்கு வசனங்கள் இல்லாவிட்டாலும் கண்களாலேயே பேசியிருக்கிறார்.
மேலும், தனது அழகால்
ரசிகர்களை கட்டிப்போடவும் செய்திருக்கிறார்.
நாசர் தனது அனுபவ
நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். அதேபோல், நாசர் கூடவே வரும் தலைவாசல் விஜய்யும் தனது
கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வால்டரின் நண்பனாக வரும் அர்ஜுனன்
வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கிற பிற கதாபாத்திரங்களும்
கதைக்கேற்றவாறு தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
‘தட்டத்தின்
மறையத்து’ என்ற மலையாள
படத்தின் ரீமேக்தான் ‘மீண்டும் ஒரு
காதல் கதை’ யாக
உருவாகியிருக்கிறது. மலையாளத்தில் ஹிட்டான
இப்படத்தை தமிழில் மித்ரன் ஜவஹர் தமிழில் இயக்கியிருக்கிறார். மலையாள ரசிக்களை
கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்தவில்லை என்றுதான்
சொல்லவேண்டும்.
அழகான காதல்
கதைதான் என்றாலும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வதால் பொறுமையாக ரசிக்க
முடியவில்லை.
ஜி.வி.பிரகாஷ்
இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. மெலோடி பாடல்களை சிறப்பாக
கொடுத்திருக்கிறார். ஷான் ரகுமானின் பின்னணி இசை கதைக்கு புத்துயிர்
ஊட்டியிருக்கிறது. விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. காதல்
கதைகளுக்கு ஒளிப்பதிவுதான் மிகவும் முக்கியம். அதை சரியாக புரிந்துகொண்டு இந்த
படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Post a Comment