திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு
கிராமத்தில் வசிக்கும் நாயகன் ஹரிஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வருகிறார்.
ஆனால், தனது
பெற்றோர்களான இளவரசு-சுஜாதா தம்பதியர்களிடம் வேலைக்கு செல்கிறேன் எனச்
சொல்லிவிட்டு நண்பன் பிளாக் பாண்டியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, தண்ணியடிப்பது
என வீணாக பொழுதை போக்குகிறார்.
அதுமட்டுமில்லாமல், எந்த
பெண்ணை பார்த்தாலும், அந்த
பெண் தனக்கு முன்னதாகவே தெரியும் என்றும், அவளிடம் நெருக்கமாக
பழகியிருக்கிறேன் என்றும் தனது நண்பர்களிடம் வெட்டிப் பந்தாவும் காட்டுகிறார்.
இதையெல்லாம் அவரது நண்பர்களும் நம்புகிறார்கள்.
இந்நிலையில், திருச்சியில் படித்து
முடித்துவிட்டு நாயகி மாளவிகாமேனன் அந்த ஊருக்கு வருகிறார். அவளையும் தனக்கு முன்னதாகவே
தெரியும் என்று நண்பர்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் ஹரிஷ். ஆனால்
இதை மட்டும் நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களிடம் அதை நிரூபித்து காட்டுவதாக
ஹரிஷும் சபதம் போடுகிறார்.
அதன்படி, ஒருநாள் மாளவிகா மேனனும், ஹரிஷும்
மோட்டார் ரூமிற்குள் இருந்து வெளியே வருவதை ஹரிஷின் நண்பர்கள் பார்க்கிறார்கள்.
மோட்டார் பழுதை சரிசெய்துவிட்டு வெளியே வரும் இவர்களை நண்பர்கள் விவகாரமாக
பார்க்கிறார்கள்.
அவர்களிடம் ஹரிஷ், தான் மாளவிகா மேனனுடன் மோட்டார்
ரூமிற்குள் ஜாலியாக இருந்ததாக ஒரு பொய்யை கூறுகிறார். இதை நண்பர்களும் உறுதியாக
நம்புகின்றனர்.
இந்நிலையில், ஒருநாள் மாளவிகா மேனன் தான்
கர்ப்பமாக இருப்பதாகவும், அந்த
கர்ப்பத்திற்கு ஹரிஷ்தான் காரணம் என்று பஞ்சாயத்தை கூட்டுகிறார்.
பஞ்சாயத்து தலைவரான நரேன், ஊரில்
எந்தவொரு பெண்ணும், ஒரு
ஆணால் சிரழிந்தார் என்று சொன்னால், அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும்
திருமணம் செய்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரிடம் இந்த பஞ்சாயத்து
செல்கிறது.
மாளவிகாவின் கர்ப்பத்துக்கு தான் காரணமல்ல என்று
ஹரிஷ் பஞ்சாயத்தில் கூறுகிறார். ஆனால், நண்பர்களை விசாரிக்கும் நரேனிடம், ஹரிஷ்
அள்ளிவிட்ட பொய்யை நம்பி, நண்பர்கள்
இவன்தான் காரணம் என்று கூறுகிறார்கள். கடைசியில் ஹரிஷுக்கும், மாளவிகா
மேனனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் நரேன். தான் காட்டிய வெட்டி பந்தா
கடைசியில் தனக்கே வினையாய் வந்ததை எண்ணி வருத்தப்படுகிறார் ஹரிஷ்.
உண்மையில் மாளவிகா மேனனின் கர்ப்பத்துக்கு யார்
காரணம்? அப்பாவி
நாயகன் ஹரிஷ் அடுத்து என்ன நிலைக்கு ஆளானார்? என்பதை விறுவிறுப்பாக
சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் ஹரிஷ், முதல் பாதியில் நண்பர்களுடன்
சேர்ந்து காமெடியாகவும் பிற்பாதியில் நாயகியிடம் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு
தவிக்கும்போது நடிப்பில் சிறப்பாக செய்திருக்கிறார்.
மாளவிகா மேனன் அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று
சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்தில் இவரது முகம் அழகாக பளிச்சென்று
இருக்கிறது. நாயகனின் அப்பாவாக வரும் இளவரசு, தன் மகனின் நிலையறிந்து அவரைப்
பற்றி பேசும் வசனங்கள் பளிச்சிடுகிறது. தனது அனுபவ நடிப்பால் அனைவரையும்
கவர்கிறார்.
பஞ்சாயத்து தலைவராக வரும் நரேனும், மிடுக்கான
தோற்றத்தில் மனதில் நிற்கிறார். பிளாக் பாண்டியும் தனது கதாபாத்திரத்தை ஏற்று
செவ்வனே செய்திருக்கிறார்.
இயக்குனர் மணிபாரதி, படத்தின்
இடைவேளை வரை ரொம்பவும் ஜாலியாக கொண்டு சென்றிருக்கிறார். பிற்பாதியில்
விறுவிறுப்பை கூட்டி படத்தை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார். இவருடைய வசனங்கள்
படத்திற்கு பலமாய் அமைந்திருக்கிறது.
தாஜ்நூரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
பின்னணி இசையை இப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக மேற்கொண்டிருக்கிறார். காசியின்
ஒளிப்பதிவு கிராமத்து அழகை ரசிக்கும்படி அமைந்துள்ளது.

Post a Comment